Pages

Friday 3 April 2015

அது 2006. மார்ச் இறுதி வாரம் அல்லது ஏப்ரல் தொடக்கமாக இருக்கலாம். எனது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இறுதி பரிட்சை - சமூக அறிவியல் அன்று. தேர்வு முடிந்து எங்கேயாவது போக திட்டமிட்டு, படம் பார்க்கலாம் என்று முடிவானது. தற்பொழுதய மக்கள் முதல்வர் தேர்தல் பிரச்சாரம் செய்ய நெல்லை க்கு வருகை தந்த தருணம். அது தெரியாமல் படம் செல்ல முடிவெடுத்து அரை மணி நேரத்திற்கு மேலாக முருகன்குறிச்சி யில் பஸ் நிற்க, மேரி சார்ஜண்ட் பள்ளி அருகே விவரம் அறிந்து இறங்கிக்கொண்டோம். படம் போட 15 நிமிடம் மட்டுமே உள்ளது. முன் வைத்த காலை பின்வைக்கலாகாது என்று உணர்ச்சி கொண்டு வண்ணாரப்பேட்டை பை பாஸ் ரோடு வரை நடந்து (ஓடி) சென்று, பின் பை பாஸ் ரோடில் ஓட , அந்த வழியாக சென்ற ஒரு குட்டி யானையில்(Tata ace) அனைவரும் ஏறி சமயத்தில் ராம் முத்துராம் தியேட்டர் அடைந்து வெற்றிகரமாக பார்த்த படம் தலைவர் ‪#‎எஸ்‬.ஜே.சூர்யா அவர்களின் கள்வனின் காதலி.
இப்போது அவரின் இசை வந்துள்ளது. ஆனால் அப்போது படம் ஒருவனும் அருகில் இல்லை. நீங்கலாம் இல்லாம எப்படி தனியா படம் பார்க்க?

நான் குடித்துக்கொண்டு இருக்கிறேன்

மிச்சமொன்றும் இல்லை
நான் குடித்துக்கொண்டு இருக்கிறேன்
கனவு நிராசை
ஒழுக்கம் ஞானம்
தனிமை வெறுமை
முயற்சி முதிர்ச்சி
கொள்கை காதல்
அயர்ச்சி அதிர்ச்சி
தன்மை பன்மை
மிச்சமொன்றும் இல்லை
நான் குடித்துக்கொண்டு இருக்கிறேன்.

சமன்பாடற்ற ஆசை

இந்த மனிதர்கள் யாரென்று
தெரியவில்லை
தங்கள் இருப்பை
நிரூபிக்க
உயர்வை தருவிக்க
வாழ்வை
வளப்படுத்தி கொள்ள
கிளை பறப்புகிறார்கள்

அவர்களின் வேர்கள் என்னவோ
சமன்பாடற்ற ஆசையின்
மீது தான் .

கண்ணாடி பார்த்துக்கொள்கிறேன்

இரண்டொரு முறை
கண்ணாடி பார்த்துக்கொள்கிறேன்
இது என்
இலையுதிர்காலம்
கீழே சிந்திய முடிகளை
எண்ணிப்பார்ககிறேன்
கையிலெடுக்கிறேன்

சாம்பல்நிற பறவையொன்று
வாசலில் சிலிர்க்கிறது
இறகடிக்கிறது
பறந்து சென்றது
இப்பொழுது சாம்பல்நிற
இறகு என் கையில்
இனி உங்களிடம் சொல்ல
ஒன்றுமில்லை
இது
வசந்தகாலமும் தான்
என் சிறகை பரப்பி
முதிர்ச்சியை அடித்து
பறக்கும்
தருணமிது..

கனவு

சோறு கண்ட இடம் சொர்க்கம் னு
சொன்னவன் ஏதோ ஒரு வகை ல
அவன் வாழ்க்கை ல கண்ட கனவு
கனவு மட்டும் தான் னு புரிஞ்சவன் தான்

வாழ்வுக்கு அப்பால் வேறொன்றை

அங்கே யாவரும் இருந்தனர். யாரென்று யாரும் சொல்ல விழையாதவாறு யாவரும் அங்கே இருந்தனர். போதை மட்டுமே வாழ்வென்று யாவரும் இருந்தனர். அங்கே உணவுக்கு யாரும் உழைக்க வேண்டியதில்லை. மண்ணும் வானும் பிரித்தறிய இல்லாத ஒன்றாய் வண்ணமும் பார்வையும் போல இருந்தன. காமம் எங்கோ வாழ்வின் தேவையாக உடலின் இயல்பாக மருவி இருந்தது. மக்களின் தேவையெல்லாம் வாழ்விற்கு அப்பால் இருந்தது. மதுவை தவிர வேறெதுவும் அவர்களை வதைக்காது இருப்பில்லை. அவர்கள் வேறொரு பூமியை தருவித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே தாயும் தந்தையும் குழந்தையும் போதுவாக இருந்தனர். கனவுகளின் கடவுள் மட்டும் வாழ்ந்துகொண்டு இருந்தான். அவனை வணங்க மதிக்க பூஜிக்க யாருமில்லை. அவனும் தேடிக்கொண்டு இருந்தான் வாழ்வுக்கு அப்பால் வேறொன்றை.
வாழ்வைபோல் ஒரு துயருமில்லை
வாழ தெரிந்தால் துயரமில்லை

Saturday 13 April 2013

ஆகாவழி கதை 2



கதை காலம் : 15 வயது  10ஆம் வகுப்பு
கதை களம் : ஆர் பி ஸ் கணித டியுஷன் மகாராஜநகர்
பொழுது: கதிரவன் கண்ணுறங்கும் நேரம் .. (நமக்கு எப்பவும் அமாவாசை தான்)

ஊருக்குள்ள நல்லா படிக்கிற பயனு ஒரு மருவாத இருந்துச்சி .. ஒழுங்கா நான் உண்டு படிப்பு உண்டுனு இருந்தேன்.. எங்கிருந்து தான் வருவாங்கலோ நமக்கு னு இவனுங்க.. மச்சான் நான் ஒரு புள்ளைய லவ் பண்றேன் னு ஒருத்தன் வந்தான் Hari Ram .. அதுக்கு என்ன டா மாப்ள நல்லா பண்ணு ...

அந்த புள்ள இது சொன்னா அது சொன்னா னு தினமும் கதை சொல்லிட்டு திரிஞ்சான் .. நாங்களும் கேட்டுட்டு இருந்தோம்.. ஒரு நாள் நல்லா போயிட்டிருந்த கதைல ட்விஸ்ட் .. திடிர்னு பிளேட் எடுத்து கைய கிழிக்கறது பேனா மைய குடிக்கறதுனு அலும்பு பண்ணிட்டான்.. என்னடா உன் சங்கதினு கேட்டேன் .. ஒரே ஒப்பாரி பாட்டா ஓடுச்சி ..
சரி நம்ம கூட பத்து வருஷமா படிக்கிற பயபுள்ள ஆச்சே ஏதாவது உதவி பண்ணட்டுமானு கேட்டேன்.. எனக்கு இப்ப மட்டும் இல்ல எப்பவுமே ஊர்ல இருக்கிற பயலுகளுக்கு உதவி பண்றதுனா உறுகாய் சாப்ட்ற மாதிரி.. (எப்பவும் சோத்த விட உறுகாய் அதிகம் சாப்டறவன் நான்)

ஊர் ஒண்ணு கூடிருச்சி .. மாப்ள நீ எதாவது பண்ணியே ஆகணும்டா .. நீ ஒரு அண்டர்டேக்கர் பேன் மாப்ள .. நீ தான் நல்லா யோசிப்பயே ஐடியா ஏதாவது பண்ணு மாப்ள.. இப்படி என்ன சுத்தி எப்பவும் ஒரு கூட்டம் உண்டு .. (இப்பவும் இருக்கு..)
சாயங்காலம் ஆறு மணிக்கு டியுஷன் ல சில புள்ளைக படிகித்துங்க னு சொல்வேயே அதுல கூட ஒரு புள்ள இவன் ஆள் பிரண்டு னு சொன்னான்ல. அது பெயர் கூட அஞ்சலி .. (பெயர் மாற்ற பட்டுள்ளது ) .. அதுட்ட போய் என்ன மேட்டேர்னு விசாரிப்போம் மாப்ள னு ஐடியா குடுத்தாங்க..

அந்த புள்ள சும்மாவே சீன் போடும் . அவ அப்பன் ஆத்தா டாக்டர் வேற..
ஒழுங்கா போயிட்டு இருந்த டியுஷன்ல இது வேறைய வம்பு .. நான் சொன்னேன் மாப்ள Siva Manian உங்க எதிர் வீட்ல உள்ள ஒரு பிகுர் இதுக்குதுல நம்ம டியுஷன் ல அது ட கேப்போம் டா னு சொன்னேன்.. இல்ல மாப்ள அது சரி பட்டு வராது வீட்ல சொல்லிடும் வேணாம் னு சொல்லிட்டான்..  சரி நாம நல்லது தான செய்ய போறோம் நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்லன்னு கமல் சார் சொல்லிருக்காரே அப்புறம் என்ன செய்வோம் னு முடிவு பண்ணியாச்சி..

ரெண்டு நாள் மூனு நாள் ட்ரை பண்ணுனோம் ஆனா அந்த புள்ளைய புடிச்சி பேச முடியல .. அதுக்குள்ளே எங்க இந்த பிளேட் பக்கிரி ரொம்ப படுத்த ஆரம்பிச்சிட்டான் எல்லாரையும் .. ஒட்டு மொத்த எங்க கிளாஸ் பசங்களும் வந்துட்டாங்க ஆதரவு கரம் கொடுக்க.. ஆனா வழக்கம் போல நாம தான் திட்டம் போடணும் , செயல் படுத்தணும் . . தீயா வேலை செய்யணும் டா கொமாரு னு பல ஐடியா வந்துரிச்சி.. அந்த புள்ளைய மறை முகமா குப்ட்டு பார்த்தேன் வேலைக்கு ஆகல .. அதுக்குள இவன் அந்த புள்ளைய பாக்கிறான்னு ஒரு புரளி வேற நம்மள சுத்தி பரவ தொடங்கிடுச்சி .. இது அந்த புள்ளயும் நம்பி சீன் போட்றத இன்னும் அதிகம் ஆக்கிடுச்சி..

இது வேலைக்கு ஆகாது னு ஒரு அமைப்பு தொடங்கிட்டோம் .. அதுக்கு பெயர் ஆங்கிலத்துல ட்ரிபிள் எஸ்( எஸ் எஸ் எஸ்) .. என்ன அர்த்தம் னு கேக்கறேங்களா சுடிதார் செக்யூரிட்டி சர்வீஸ்.. அந்த அமைப்பு முக்கிய வேலை புள்ளைகளின் வீடுகளை கண்டறிவது தொலைபேசி எண்களை அறிவது என பெண்கள் பாதுக்காப்பு குறித்த அனைத்து பொறுப்புக்களும் அதில் உண்டு.. அதன் நிர்வாகிகள் Nagoor Mideen Rama Swamy Veera Mani Ganapathy Subramanian கஞ்சா கணேஷ் இன்ன பிற டியுஷன் நண்பர்கள்..

ஒரு வழியாக அந்த புள்ளையிடம் பேச வாய்ப்பு வந்தது . ஆனால் நேரம் பார்த்து இந்த நல்ல உள்ளம் கொண்ட நண்பர்கள் அன்று தாமதம்.. போன் அடிச்சேன்.. சாரி மெசேஜ் அனுப்பினேன். நீயே டீல் பண்ணு மாப்பு வி ஆர் ஆன் தி வே னு ரிப்லே வந்துச்சி.. நாம தான் வீர தீர சூர பறாக்கிரம அண்டர்டேக்கர் பேன் ஆச்சே.. ஒழுங்கா நேர் வழில போய் பேச மாட்டோம் ல .. டியுஷன் வீட்டு சுவர் ஏறி குதிச்சி படி ஏற்ற புள்ளைய வழி மடக்கி "யே புள்ள இந்தா நில்லு டியுஷன் முடிஞ்சு வந்து கேளு உண்ட பேச வேண்டியது இருக்கு "னு சொல்லிட்டு படிக்க அனுப்பிட்டேன்.. அப்பக்கூட படிக்கறத தொந்தரவு பண்ற பழக்கம் எனக்கு இல்ல.. அட நம்புங்க பாஸ் மெய்யாலுமே நானும் படிக்கிற பய தான்..

வீர தீர செயல் செய்ய போன நான் எந்த மேட்டர் பத்தி பேச வேண்டியது இருக்குனு சொல்ல மறந்துட்டேன் .. போச்சா சொனமுத்தான் .. வழக்கம் போல நம்மள சுத்தி ஓடி புடிச்சி விளையாண்டுட்டு இருந்த கதை இப்ப உண்மைன்னு ஊர் வும் உள் மனசும் அவளுக்கு தந்தி அடிசிருக்கும் போல .. நிக்க சொன்னா நிக்கல.. நாம தன்மான சிங்கம் ஆச்சே விடுவோமோ நம்ம சைக்கிள் ல அவ ஸ்கூட்டி ய சேஸ் பண்றது அவ வீட்டு வாசல போய் நின்னு சீய்ட்டி அடிக்கறது..நம்ம அமைப்பு மூலமா வீட்டு போன் நம்பர் கண்டு பிடிச்சி போன் போடறது இன்ன பிற சடங்கு சம்பிரதாயம் அனைத்தும் செயல் படுத்தி (அந்த புள்ளைய பாட படுத்தி )
கதை போயிட்டு இருந்துச்சி ..
சரி நம்ம நடவடிக்கைகள தொடர்ந்து உற்று நோக்கி கொண்டிருந்த நல்ல உள்ளம் கொண்ட வகுப்பு நண்பர்களுக்கு கொஞ்சம் பாவமா கூட தோணல .. இன்னும் இன்னும் னு கொளுத்தி என் மூளைக்கு அடில வச்சி ஓட விட்டாங்க..

இந்த ரண களத்துல அந்த புள்ள அவ அண்ணனுக்கு எங்க டியுஷன் மாஸ்டர் க்கு அவ என்ன நினைச்சிட்டு இருந்தாலோ அதை சொல்லிட்டா.. அவ்வளோதான்.. ஊருக்குள்ள ரவுடி பொரிக்கி னு நல்ல பெயர் வந்துருச்சி.. எங்க மாஸ்டர் சும்மா வெறும் கையவே நக்குவாறு...  நான் இல்லாத நேரம் பார்த்து நண்பர்கள்ட அவன் கூட சேராதீங்க பா.. அவன் பொரிக்கி .. அவன் தான் உங்க கேங் லீடர் ஆ னு வறுத்து எடுத்திருக்காரு.. இதுல நான் அவர்க்கு சொந்தம்னு தெரிஞ்சு போச்சி.. உங்க அப்பாவ பார்த்தேன் னு ஒரு நாள் போட்டாரு ஒரு அணுகுண்ட.. அவ்வளோதான் .. அன்னைக்கு நான் வீட்டுக்கு எப்படி போன்னேன் னு நினைச்சா இன்னமும் சிரிப்பு சிரிப்பா வருது..

ஆமா இந்த கதைக்கும் ஏன் ஆகாவழி கதைனு பெயர் வந்துச்சினு பார்க்குறிங்களா.. அந்த பிளேட் பக்கிரி கடைசில என்ன தெரியுமாங்க சொன்னேன் .. அப்படி ஒரு புள்ளையே இல்ல .. எல்லாம் கதையாம்..

பி.கு: இந்த கதையை என் பள்ளி நண்பர்கள் டியுஷன் நண்பர்கள் , அந்த டியூஷனில் படித்த நல்லவர்கள் , என்னை போன்று உதவி என்றதும் அப்பாவி தனமாக ஓடி உதவி செய்து அவஸ்தை படும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்

Wednesday 10 April 2013

ஆகாவழி கதை



ரெண்டு வாரம் சும்மா தான் இருந்தேன் இந்த சைட் க்குள்ள ஒரு பயலும் வரல.. நாம இண்டேர்விஎவ் போற நாள் பார்த்து வந்தாங்க
ஏட்டு அடி ஆழத்துக்கு பள்ளம் பறிக்கற வேலைக்கு கம்ப்றேச்சர் கொண்டுட்டு.. சரி இது தான் நம்மகு ஒதுக்கலைய அந்த பக்கத்து சைட் சூப்பர்விசர் தான வரணும் னு அந்த பக்கிக்கு போன் போட்டேன்.. ஆமா பா நாளைக்கு காலைல நான் அங்க இருப்பேன் சீக்கரம் வந்துரு நான் அவரு.. கொஞ்சம் நேரத்துல நம்மள இண்டேர்விஎவ் க்கு கேரளா வர சொல்லி கூப்ட அவருக்கு போன் போட்டு நான் லீவ் சாமி , நீங்களே பார்த்துக்கோங்க னு சொல்லி போய்ட்டேன்.. அஞ்சு அடி வட்டமா எடுக்க சொல்லிடு போயிருந்தேன்.. மறுநாள் வந்து பார்த்த பயபக்கி நாலர அடி தான் எடுத்து இருக்கு.. அந்த உயர்ந்த சூப்பர் விசர் ரும் வந்து பாக்கல.. நானும் அந்த பெரிய சூப்பர்விசர் ட கேட்டன் , ரொம்ப நல்ல மனுஷன் அவரு அது ஒன்னும் பிரச்சனை இல்ல, விட்ரு பா நம்ம சைட் க்கு உடனே வா பில் எடுக்கணும்னு கூப்பட்டார்.. நானும் போய்ட்டன்..
மிசின் வந்திருந்தது இந்த கதை நடந்தது நாலு அஞ்சி நாளுக்கு முன்னாடி..

நேத்து அந்த குழில வளையம் இறக்க வந்த ஆளு இதுலாம் முடியாது சார் .. அஞ்சு வேணும் .. குழி எடுத்து வைங்க வரோம் னு போய்ட்டாங்க..
சரி போன்னவங்க சும்மா போன்னாங்களா , முதலாளிக்கு போன் போட்டு குழி சிறுசா இருக்கு நாலு அடி கூட இருக்காது போல. எடுத்து வைங்க ரிங் எறக்கி தரோம் னு சொல்லிட்டாங்க.. எங்க முதலாளி தான் ரொம்ப நல்லவர் ஆச்சே சும்மாவே ஊருக்குள்ள மழை பெஞ்சா தெருவுள்ள நாய் தொரத்துன்னா நம்மட்ட தான் டென்ஷன் ஆவாரு (எவனாது வேலை செய்ஞ்ச காசு கேட்டு வந்தாலும் அப்படிதான்).. இது தான் வாய்ப்புனு சும்மா வெண்ணி அள்ளி ஊத்துனாரு .. நானும் போயா போ இன்னும் ஒண்ணு ரெண்டு நாள் தான் டி அப்புறம் இருக்கு ரிவிட் னு அமைதியா டீ குடிச்சிட்டே தம் அடிச்சிட்டே கேட்டுக்கிட்டு இருந்தேன்..

இந்த நிலைமைல சைட் ல லபௌர் ஒருத்தனும் கிடையாது.. முடிஞ்சு போன்ன சைட் னு அவளோ பேரையும் போட்டி தூக்கி குடுத்து வீட்டுக்கு அனுப்பியாச்சி.. கட்டடத்துக்கு தண்ணி விடற எங்க  லோக்கல் லபௌர் வர சொல்லி சரி இன்னைக்கு ஆள் புடிச்சி வேலைய முடிப்போம் னு ஊர் க்குள்ள அழைஞ்சா ஒரு பயலும் வர மாட்டேன் குறான்.. கேட்டா அமாவாசை யாம்..

நாசமா போச்சி நம்ம பொழப்புன்னு நானே மண்வெட்டி கடப்பாரை தட்டு எடுத்து குழி க்குள்ள இறங்கிட்டன்..
"எலிக்கு என்ன வேலை மண்ணு பறிக்கிற வேலை
பூசாரிக்கு என்ன வேலை மணி அடிக்கிற வேலை
 சூப்பர்விசர் க்கு என்ன வேலை சும்மா இருக்கிற வேலை "
அப்படிங்கற தத்துவத்த நம்பி கிடந்தவனுக்கு
உச்சி நட்டுக்கிச்சி
உள்ளங்கை பிச்சிகிச்சி
உச்சில வேர்த்து கால் சட்டை நனைச்சி மண்ல போகுது நீரு,

திசை தெரியாம குழி க்குள்ள  மண்ணு பறிக்கு இந்த கேலட்டு மனுஷன் நம்மக்கு அப்ப தான் ஐடியா சொல்றாரு..
"தேம்பரம்(தெற்கு பக்கம்) மேடு
வடவரம்(வடக்கு பக்கம்) கோடு
கெலவரம்(கிழக்கு பக்கம்) போடு
மேவரம்(மேற்கு பக்கம்) மாட்டு"
எந்த திசை ல இருந்துயா வந்த நீ
அய்யா சாமி இப்படி நீ தெச சொன்னா நான் போய்டுவேன்  ..
ரெண்டு பெருமா சேர்ந்து அஞ்சு அடி வட்டத்துக்கு குழி எடுத்து மண் அள்ளி தூக்கி குடுத்து வெளில கொட்டி
ஒரு வழியா அவங்க சாயங்காலம் வர்றதுக்குள்ள ரெடி பண்ணி முடிச்சிடோம்

ஆமா இந்த கதைக்கு எதுக்கு ஆகாவழி கதை னு பெயர் வச்சன்னு யோஷிக்கேங்களா.. காசு வாங்கிட்டு ஒழுங்கா வேலை செய்யாத கம்ப்றேசர் காரன்.. வரவேண்டிய சூப்பர்விசர் வராம இருந்தது மட்டும் இல்லாம அவருக்கு பில் எடுக்க கறி வலிச்சி நம்மள வரவைக்க எல்லாம் சரிதான்னு போய் சொன்ன அந்த பக்கி . லபௌர் எல்லாரையும் ஊர்க்கு அனுப்புன முதலாளி.. அமாவாசை கதை சொல்ற ஊர்க்காரங்க.. இந்த ஆகாவழி பேர்வழிகள நம்பி பொழப்பு கேட்ட நான் மட்டும் வேற யாரு.
அதான் கதைக்கு என் பெயரே வைச்சிடேன்..

பின் குறிப்பு: பார்த்த வேலைக்கு ரெண்டு லபௌர் கணக்கு காட்டி காசு கண்டிப்பா வாங்கிடுவேன். உபரி உற்பத்தி உபரி இலாபம் இது எப்பவும் இருக்க கூடாது னு நினைக்கிற சொசியளிஸ்ட் நாங்கோ..

Tuesday 2 April 2013

தேவன் அடியாள் எனவானேன்

பெற்றதோர் பெண்மகள் யாவரும் அறிந்தனர் 
புணர்ந்ததோர் ஆண்மகன் நீவரும் உணர்ந்தனல் 
யார்செய்த பாவமென யார்பெயரும் அறிகிலன் 
ஊர்மொழிந்த பெயர்களாய் என்பெயராய்  யாம்  பெற்றேன் 
முன்மொழிந்த பெயர்களையே தொழிலாய் யான் கற்றேன் 
உன்மக்கள் பசி தீர்க்க நான்வந்தேன் 
தேவன் அடியாள் எனவானேன் 

கனவு கதைகள்

 நேரம் தவறாமல் வருபவன் நான் ... நேரம் கடந்தே வந்த உன் காதல் ..
சிக்னல் க்காக காத்திருக்கும் பேரூந்து .. சிணுங்களில் காதல் சொல்லும் நீ ..
எப்போது வந்தாய் என் இருக்கையின் இட இருக்கைக்கு ..
உலகை பார்த்து செல்பவன் உனை காண்கிறேன் 
என்னிடத்திலே உலகை காண்பதாய் நீ ..
வழி மாறி வந்தவளோ இடமாறி அமர்ந்தவளோ 
கதை சொல்ல வந்தவளோ கவிதை பூ தொடுப்பவளோ 
எதுவென்று அறியுமுன்னே 
காது கடிக்கிறாய் கன்னம் தடவுகிறாள் 
காதல் கவிதை உடலில் எழுதுகிறாய் ..
கூட்டம் மறைந்துபோக கூத்தாடி நானாக 
கூடி களவுகளில் கண்கள் மூடுகிறாய் 
கண்கள் திறக்கும்போது போகிறாய் என்செய்ய !

Monday 1 April 2013

வண்ணங்கள் இழந்த


என் கால்களில் இருந்த செருப்பின்
சிவப்பு மஞ்சள் வண்ணம் கண்டு சிரிக்கிறார் அவர்

அவரின் தோள்களில் இருந்த பல வண்ண துண்டை
கண்டு நானும்

இருவரையும் கண்டும் காணாமல் சிரிக்கிறார்
சுவர்களில் ஏதோ கட்சி யின் வண்ணமிடும் முதியவர்

அனைவரிடமும் சிரிக்கிறது
தார் சாலையின் வெள்ளை கோடுகள்

எல்லாவற்றையும் ஆச்சரியமாக பார்க்கிறது
வண்ணங்கள் இழந்த சாலையோர சிறுமி

Sunday 17 March 2013

எப்பொழுது இப்படை வெல்லும்


தமிழகம் முழுதும் வெவ்வேறு கல்லூரி மற்றும் தமிழ் உணர்வாளர்களால் தனி தமிழ் ஈழம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நிகழ்ந்து வருகிறது .. இப்போராட்டத்தின் ஆதரவாளர்களால் (நான் உட்பட ) இது அனைத்து  தரப்பு மக்களையும் சென்றடைந்தது அல்லது சென்றடைவது  போலவும் , எல்லா கட்சிகளும் நம்மைக்கண்டு அஞ்சுவாதாகவும் சொல்லப்படுகிற இந்தப்போராட்டம் உண்மையில் எதை செய்து முடித்துள்ளது , எதை செய்ய வேண்டியதுள்ளது என்பதே இந்த கட்டுரை ..

சில நாட்களாக  வெவ்வேறு தரப்பட்ட நண்பர்கள் மாணவர்கள் இளைஞர்கள் கிராம  பொதுமக்கள் நகர பொதுமக்கள் சில அரசியல் கட்சி சார்புடைய தோழமைகள்  சமூக சிந்தனைக்கொண்டவர்கள் , சிந்தனை இல்லாதவர்கள் என பலதரப்பட்ட தமிழர்கள் உடனான கருத்து கேட்டலும் பரிமாற்றமும் மட்டுமே இது .. இதை நான் எழுதுவது போலவே , ஏற்பதும் நிராகரிப்பதும் உங்களின் சுகந்திரம் இந்த கட்டுரையின் மனிதர்கள் போலவே ..


போராட்டம் துவங்கிய நாள் இரவில் என்னுடன் படித்த சில தமிழ் உணர்வு சமூக சிந்தனைக்கொண்ட நண்பர்களுக்கு தொலைபேசியில் தொடர்புக்கொண்டு இதில் பங்கெடுக்கும் அவசியம் பற்றி விவாதிதோம் .. 2009 ஆம் ஆண்டில் தவற விட்ட போராட்டம் மீண்டும் உயிர்ப்பெற்றிருப்பது எங்களுக்கு ஒருவித மகிழ்ச்சியும் உத்வேகத்தையும் ஏற்ப்படுத்திருந்தது .. போராட்டம் செய்த மாணவர் ஒருவர்க்கு அழைத்து வாழ்த்தினோம் .. இருப்பினும் 2009யின் ஞாபகம் இருந்தது .. இம்முறை இதில் பங்கேற்க விரும்பு தோழர்கள் பலரை ஒன்றுதிரட்ட முயற்சித்தோம் .. வழக்கம் போல சொற்பமாகவே முன்வந்தனர் .. இப்போது நாங்கள் மாணவர்கள் அல்ல ..  எல்லோரும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பணியில் உள்ளோம் .. படித்து முடித்துவிட்டோம் .. மாணவர்களுடன் சேர்ந்து செய்ய முடியாது , தனியாக செய்வதா ?. நாங்கள் எங்கு ஒன்று கூடுவது .. எப்படி போராட்டத்தை முன் நிறுத்துவது .. சில போராட்டத்தில் பங்கெடுத்த இருவரிடம் இது பற்றி கேக்கலாம் என்று முடிவு செய்து அவர்களை தனிப்பட்ட முறையில் எங்களின் நிலைப்பாட்டை விவரித்து அணுகினோம் .. நாங்களும் போராட வேண்டும் என்று அவர்கள் விரும்ம்பினாலும் தனியே செய்ய முயற்சிப்பது உங்களை பிரச்சனையில் கொண்டு போய் விடும் அதே சமயம் நீங்கள் மாணவர்களுடன் பங்கேற்க முடியாவிட்டாலும் வேறு இயக்கங்களுடன் சேர்ந்து செய்யுமாறும் அல்லது மக்களுக்கு இதனை பற்றிய சிந்தனையை போராட்டத்தை கொண்டு செல்லுமாறும் சொன்னார்கள் ..

முதலில் என் கல்லூரியின் தற்போதைய மாணவர்கள் சிலருடன் இதை பற்றி விவாதித்தேன் . . அப்போது அவர்கள் பலவகைப்பட்ட பயத்துடன் இதுலாம் செய்ய முடியும் என்று நம்பிக்கையும் , நம் கல்லூரி அளவில் சாத்தியமானதும் என்று சொல்லமுடியாது வேண்டுமானால் நீங்கள் செய்யுங்கள் , யார் வருகிறார்களோ இல்லையோ நான் வருகிறேன் என்றனர் .. ஆனால் மறுப்பக்கம் போராட்டம் விரிவடைந்துக்கொண்டிருந்தது ..
மீண்டும் வேறு பல கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கும் சக நண்பர்களுடன் போராட்டம் பற்றி விவாதிக்க துவங்கினேன் .. இந்த போராட்டம் பற்றி என்ன நினைகிறீர்கள் என்றேன் .. பெரும்பாலும் அவர்கள் சொன்ன வார்த்தை "ஐ சப்போர்ட் (நான் ஆதரிக்கிறேன் )  ".. சரி அப்போது களம் காண்போமா வருவீர்களா என்றதும் பலரும் சொன்ன வார்த்தை " முடியாது ". ஒரு சிலர் மட்டுமே நான் அனைத்து மாணவர்களின் விருப்பமறிந்து பின் சொல்கிறேன் .. 
இங்கே தயக்கம் இருப்பது தெரிந்த விஷயம் தான் .. 2009யில் நாங்கள்  கேக்கும் போது கிடைத்த பதிலும் அது தான் .. நிருவாகத்தின் அச்சுறுத்தல் , குடும்ப நிலைமை , மாணவர்கள்  பின்வாங்கிவிட்டால் ? ஒரு வேலை இவன்தான் அனைவரையும் ஒன்றினைத்தான் என்று சிலரால் போட்டு கொடுக்க பெற்று பிரச்சனைகளில் தனியாக மாட்டிகொண்டால் ? இன்னும் பல கேள்விகள் .. இதற்க்கெல்லாம் ஒரே பதில் இப்போது போராடும் மாணவர்கள் எப்படி முன்னெடுத்து செய்கிறார்கள் , எப்படி மற்ற தோழமைகளின் ஆதரவு பெற்றார்கள் என்பது தான் .. 

இங்கே நான் பணிபுரியும் கிராமத்தில் உள்ள சில மனிதர்களின் கருத்துக்கள் 
அப்பாசாமி 55 வயது : சார் நீங்க சொல்றது சரிதான் , ஆனா நாம ஏன் போராடனும் .. கஞ்சி யாரு ஊத்துவா ? பொழப்ப பாக்க விடுங்க .. நீங்களும் போய் அதை செய்யுங்க ..

செல்வி 47 வயது: என்ன பசங்க போராட்டம் எதுக்காக ? ஈழம் பற்றி எடுத்து சொன்ன  பின்  அப்படியா எனக்கு தெரியாது என்றார் . . இப்போது நான் இதுலாம் சொல்லிய பின் இது பற்றி உங்களின் கருத்து என்ன என்று கேட்ட போது என்ன சொல்லணும் , நான் என் வேலைய செய்றேன் ,அவங்க அதை செய்றாங்க அதுக்கு நான் என்ன சொல்றது .. இல்ல நீங்க ஆதரிகேங்களா, நான் என் வேலை செய்றேன் அவளோதான் போப் பா .. (நானும் அவர் உடனே ஆதரிப்பார் என்று எதிர்ப்பாக்க வில்லை .. புதிதாக கேக்கப்படும் ஒன்றில் தனக்கென்று தனி கருத்து ஒருவருக்கு உடனே வருமென்று எதிர்ப்பார்க்க முடியாது ..) 

பலரும் ஒரு பெரிய ஆதரவாக பதில் தரவில்லை .. ஒரு வேலை அவர்கள் டெசோ ஆதரவாளர்கள் என்று படிப்பவர்கள் நினைக்க வேண்டாம் .. அவர்கள் பிரச்னையை அடுத்தவர்களுடையது என்று விலகி நின்றுப்பார்ப்பவர்கள் .. 

சரி படித்த இளைஞர்கள் என்று சிலரிடம் இது பற்றி கேட்டேன் :
ஒருவர் பெரிய கல்லூரி ஒன்றில் முதுகலை பொறியியல் முதலாம் ஆண்டு , அவர் பதில் தான் என்னை இது பற்றி எழுத வேண்டும் என்று தோன்ற செய்தது .. அவர் சொன்னது , போராட்டமா எதுக்கு , நீங்க போராடுனா  இலங்கை ல மாறிறுமா ? எனக்கு கூட போராட ஆசை தான், லீவ் கிடைக்கும்  ஆனா பிரச்சனை வரும் கல்லூரி நிர்வாகம் ஏதாவது பண்ணிட்டா ? 

இவர் தான் இப்படி என்று இன்னொரு தோழரிடம்  கருத்து கேட்டேன் , அவர் உங்களுக்கு வேற வேலை ஏதும் இல்லனா இப்படி தான் பண்ணுவேங்க , போங்கடா என்று சில கெட்ட வார்த்தைகளுடன் வந்தது ..
அவரிடம் அப்போது  போராடும் சக மாணவர்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கறீர்கள் என்று கேட்டதற்கு , எல்லாம் கொழுப்பு வேற என்ன என்றார் .. (இது ஒரு வேளை தன் கையாளாகாத தனத்தின் காரணமாக அவர்களின் மீது உண்டான கோபமாக இருக்கலாம் .)

இருந்தாலும் பெரும்பான்மையான மாணவர்கள் சொன்னது , விருப்பம் தான் ஆனா பயமா இருக்கு .. தீடிர்னு கூட பண்ண பசங்க பின் வாங்கிடாங்கனா , இல்ல நிர்வாகம் ஏதும் சூழ்ச்சி பண்ணி எங்கள பிறிச்சிட்டாங்கனா , நாலு அஞ்சு பேர்  மட்டும் மாட்டி அவன் வாழ்க்கை போறதுக்கா ?..

இங்கே நாம் மூகநூலில் அனைவருக்கும் சென்று சேர்க்கப்பட்டதாக நினைக்கும் கருத்துக்கள் உண்மையில் ஒப்பிட்டு பார்க்கையில் மிக சொற்பமான மக்கள் மத்தியில் மட்டும் தான் போய் சேர்ந்துள்ளது .. 
இப்படிபட்ட சூழலில் இந்த போராட்டத்தை பல தரப்பட்ட மாணவர்கள் எடுத்து இருந்தாலும் , இங்கே நாம் பார்க்க வேண்டியது இந்த போராடாத பெரும்பான்மையான மக்களை போராட்ட களம் நோக்கி செல்ல கருத்துக்கள் கொண்டு சேர்த்து , அவர்களின் ஆதரவாலும் போராட்டத்தாலும் தான் இந்த போராட்டத்தை வெற்றி பெற வைக்க முடியும் என்பது தான் .. 

அதற்கு முதலில்  விருப்பம் இருந்தும் பயம் கொண்டு கல்லூரியின் நிர்வாகதிற்கு கட்டுப்பட்டு இருக்கும் இந்த பெரும்பான்மையான மாணவர்களை போராட்டத்துக்குள் இணைக்காவிட்டால் நிச்சியம் இது ஒரு பெரிய அளவில் அரசின் நிர்வாகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்காது .. எந்த அரசாங்கமும் குறிப்பாக இந்திய அரசும் தமிழக அரசும் கண்டுக்கொள்ளாது .. நாம் எற்றுகொள்கிறோமோ இல்லையோ நிலைமை இது தான் .. போராட்டத்தை எப்படி ஒருங்கிணைப்பது விரிவுப்படுத்துவது என்று சிந்தித்து முடிவெடுத்து செயல் பட வேண்டிய தருணமிது ..

Thursday 14 March 2013

தொடுவானின் உரசல்கள்

  
மதிய வெயிலில் உணவு விடுதி நோக்கி செல்ல முற்படுகையில் எதிரே வந்தார் அப்பாசாமி .. வெத்தலை வாங்கிக்கொண்டு திரும்ப வருகிறார்.. அவர் என் கட்டிடத்தில் தான் வேலைப்பார்க்கிறார் .. ஐம்பதுகளை கடந்த எண்களில்  எதோ ஒன்று அவர் வயதாக இருக்கலாம் .. தளர்வான சட்டையும் வெண்ணிற வெட்டியும் எப்போதுமே, இங்கு வேலை செய்வதால் என்னமோ அது முழுதும் வெள்ளை என்று சொல்ல இயலாது .. என்னில் இருந்து இருபது அடி முன் தன் வண்டியை நிறுத்தினார் ... என்னையே பார்த்தார் .. என்ன ஐயா இங்க நின்னுட்டீங்க போய் வேலைய ஆரம்பியுங்க சீக்கிரம் , நான் போயிட்டு வரும்போது கான்கிரிட் போட்டு முடிச்சிருக்கணும் என்று சொன்னேன் .. பொதுவாகவே நான் யாரையும் அதட்டியோ திட்டியோ வேலை வாங்குவதில்லை ..  அதே போல சொல்லிவிட்டு சரி வரேன் என்றதும் ஓரிரு  கணங்களின் மௌனத்திற்கு பின் அவர் கேட்டார் சார் உங்களுக்கு கொய்யா க்கா வேணுமா ..

கொய்யா க்கா எங்க இருக்கு இந்த இடத்துல .. யார் தந்தா ? என்பதை உங்களுக்கு எது கொய்யா க்கா இங்க என்றேன் ? பொதுவாக எல்லா கேள்விகளையும் பதில்களையும் சுருக்கமாக சொல்லித்தான் பழகிவிட்டேன் வேலைக்கு வந்த தனிமைக்காலங்களில் ..
அங்க பாருங்க சார் என்று கண் காட்டினார் .. மாட்டு தொழுவம் .. சோள தட்டைகளின் வாசம் சாணமுடன் சேர்ந்து .. இங்கு சோள பயிர்கள் தான் பெரும்பாலும் விவசாயம் .. இங்குள்ள கோழி பண்ணைகளுக்கு அதன் தீவனம் அரைப்பதற்கு இங்கிருந்துந்தான் எடுத்துசெல்ல படுகிறது .. மாடு கன்றுகளுக்கும் சோள இலைகள் தண்டுகள்தான் உணவு இங்கே .. அது கொடுக்காப்புளி மரம் யா , எனக்கு வேணாம் என்று சொல்லிமுடிக்கும் முன்னே சார் கொஞ்சம் அதுக்கு  பின்னாடி பாருங்க என்றார் செய்கையிலே .. வாய்மூடாமல் பேசுமிவர் ஒருவேளை செய்கையில் பேசுவதை என்னிடமிருந்து கூட இவர் கற்றிருக்கலாம்.. ஆம் கொய்யா மரந்தான் ஆனா நாம எப்படி எடுக்கிறது ?  திருடவா ? நான் வரல என்றேன் .. சார் திருட்டு வேலைனா உங்க குப்பிடுவேனா என்று .. இருங்க வரேன் என்று  வேகமாக உள் சென்றார் மீண்டும் பின் திரும்பி நிற்க வேண்டி செய்கை செய்து சென்றார் .. சற்று விலகி அவருடன் ஒரு குழந்தையும் சேர்ந்துக்கொண்டது .. அது அந்த வீட்டு பெண் குழந்தைதான் .. பதிமூன்று அல்லது பதினைந்து வயதிருக்கும் .. யாராய் இருந்தாலும் அதை பார்ப்பவர்களுக்கு குழந்தையாக தான் தெரியும் என்று நிச்சயம் சொல்லலாம் ..  எந்த ஆடவன் கண்டும் ஆடைகளில் எல்லாம் சரியாக இருந்தும்  திருத்தம் செய்யாவிடில் குழந்தை தானே அது .. பெரும்பாலும் நான் பார்த்த நாள் எல்லாம் ஆரஞ்சு நிற ஆடைதான் .. ஒருநாளும் பேசியதில்லை .. ஆடோ மாடோ மேய்த்துக்கொண்டிருக்கும் .. கோழியோ அதன் குஞ்சிகளோ சில நேரம் விளையாட்டிற்கு அதனுடன்  .. அது அவரிடம் இருபதிருக்கும் மேல் கொய்யா க்கா பழங்களை பறித்து தந்து அனுப்பியது .. தூரத்தில் இருந்து என்னை பார்த்துக்கொண்டு பின் அது அதன் போக்கில் ஓரிரு காய்களுடன் சென்றது .. தன் சேலை முந்தானையில் மறைத்து கட்டி மகனுக்கோ மகளுக்கோ  வீட்டிற்கு எடுத்து செல்லும் தாய்ப்போல தன் தலை துண்டில் போட்டு வயருடன் ஒட்டி ஏந்திக்கொண்டு என்னிடம் வந்தவர் அவராகவே ஏதும்கேக்காமல் மூன்று நான்கு பெருத்த காய்களாய் பார்த்து என் வண்டியின் பைகளுக்குள் வைத்தார் .. போய் சாப்பிட்டுவிட்டு  இதை உங்கள் வீட்டில் வைத்து விடுங்கள் என்று சிரித்துக்கொண்டே போனார் ..

அந்த பச்சை தோல் கொண்ட கொய்யா காய்களை கண்டவுடன் ஏதேதோ ஞாபகம் எனக்கு ..
நானும் குழந்தையாகி போனேன். என்ன நிகழ்ந்ததோ அங்கு .. வண்டியை துவக்கியவுடன் ஒரு காய்யை எடுத்து திண்ண துவங்கினேன் .. எதை பற்றியும் கவலை இல்லை .. யார் செயலை நினைத்தும் வருத்தமில்லை .. எதோ என் சிறு வயதில் இருந்த பாளை மகாராஜநகர் d 106 வீடு ஞாபகம் வந்தது .. அங்கும் இது போல ஒரு கொய்யா காய் மரம் இருந்தது .. ஆம்  இருந்தது என்று தான் சொல்லவேண்டும் .. நாங்கள் இருந்த வீட்டின் பின் புறத்தில் இருந்த சுற்று சுவர்களை உரசிக்கொண்டே வளர்ந்த மரம் அது .. எல்லோருக்கும் அங்கு இருந்த மாங்காய் மரத்தின் மீது ஓர் கண்ணிருக்க எனக்கு மட்டும் அந்த கொய்யா மரந்தான் எப்பொழுதும் .. சிறுவயதில் இருந்தே நான் விளையாடும் மரமும் அதுவே .. அப்போது சிறு வயதில் எனக்கு என்னவோ அந்த மரத்தின் மீது ஓர் பிரியம் .. விரும்பும்போது எல்லாம் நான் குரங்காய்  தொங்குவதும் , சறுக்கி விளையாடுவதும், ஊஞ்சல் போல் ஆடி மகிழ்ந்து விளையாடுவதை  என் அண்ணன் கண்டிருக்கலாம் .. ஆனால் ஒரு போதும் அவன் என்னுடன் இங்கு அமர்ந்ததாய் ஞாபகம் இல்லை .. ஓரிரு முறை என் அப்பா என் ஆசைக்காய் வந்து என்னுடன் விளையாண்டு போவார் .. சிறு வயதில் காலை பல் துலக்கும் முன்பே வந்துவிடுவேன் இந்த மரத்திடம் ..பள்ளிக்கு செல்ல நேராமானாலும் வரமாட்டேன் . அந்த ஐந்தாறு வயதுகளில் எனக்கு நேரம் பற்றிய எந்த அவிப்பிராயமும் கிடையாது .. நான் பாக்கும் போது எல்லாம் என் நினைவு தெரிந்து அண்ணன் விளையாண்டது அவர்களின் படிகளில் சீட்டு , அவரின் வாசலில் கிரிக்கெட்டும் தான் .. அவர்கள் என்னையும் சேர்த்துக்கொண்டார்கள் பல நேரங்களில் என்பது ஒருவித பெருமையே இப்பொழுதும் கூட  ..  

இப்போதும் காலத்தை மறந்துப்போனேன் .. நான் தனியே போனாலும் தனியாய் போகவில்லை .. காலத்தையும் நேரத்தையும் எங்கோ துலைத்து  விட்டேன் .. மகிழ்ச்சிதான் அதில் எனக்கு .. அந்த கொய்யா மரத்திற்கு பதிலாய் ஒரு வாகனம் .. இருப்பினும் நான் சென்றது என்னவோ அந்த பழைய வீட்டு கொய்யா மரத்தின் முதுகில் தான் என்னை பொருத்தவரை ..

வழியில் சென்றவர்கள் எல்லாம் புன்னைகைத்தார்கள் .. நானும் கூட .. அந்த ஒற்றை கொய்யா க்காய்  என்னையும் எதிரில் வந்தவர்களையும் குழந்தைகளாய் மாற்றின .. தொட முடியாத கடந்தக்காலந்தான் .. பெறமுடியாத குழந்தை பருவந்தான் ... ஒரு கையில் கொய்யாக்காயுடனும்  மறுக்கையால் வாகனத்தை நகர்த்தியும் செல்லும் போது எதிரே தெரிந்த தொடுவானுடன் சிறு  உரசல்கள் .. 

சரித்திர மொன்று படைத்திட

மௌன துயரில் இருந்த 
நாங்கள் 
மந்திர புன்னகை இடுகிறோம் 

தந்திர அரசியல் செய்த 
நீங்கள் 
மரணிக்கும் நேர மிது 

எந்திர வாழ்வை துறந்த 
இளைஞன் 
சுகந்திர முழக்க மிடுகிறான்

சரித்திர மொன்று படைத்திட
மாணவன்
முந்தி செல்கிறது போராட்டம்

Wednesday 13 March 2013

மனம் மரிக்க வேண்டி 4


இவ்விடம் சுகமில்லை 
இத்தொழில் சுவையில்லை 

எவ்விடம் போகத்துணிந்தும் 
தடைபெற்ற  நீரானேன் 

அணைகள் என்றறிந்தும் 
அலைகள் உறங்குவதில்லை 

தடுப்பணைகணூடே கொஞ்சம் 
கசிகிறது வாழ்வுமிங்கே 

மனம் மரிக்க வேண்டி 1


சொல்வதற்கு நிறைய உண்டு
பேசுவதற்கு ஒன்று மில்லை

எல்லோருக்கும் கா துண்டு
கேட்பதற்கு திற னில்லை

வாழ்க்கைக்குள் சிக்கிக்கொண்ட நோயிங்கு
வட்டத்துக்குள் சிக்கமறந்த மனமங்கு

தன்னிலையில் விருப்ப மினினும்
எந்நிலையிலும் மாற்ற மில்லை

ஊர்க்கூடி தெருவி லங்கே
தெருக்கோடியில் நானு மிங்கே

நன்றோ தீதோ எதுவரினும்
நின்றுப் பார்க்க ஆசையுண்டு

செயலிழந்த கால்கள் மட்டும்
வழித்துணையாய் வந்து போகும்

கண்ணுறங்கும் நேரம் வரை
நெஞ்சுக்குள் தீ கொழம்பு

மண்ணுக்குள் போகும் வரை -பாவி
மனம் படுந் துயரம்

வினையென்று வாழும் வாழ்வில்
துணைக்கொள்ள ஏதுமில்லை

துணைக்கொள்ள ஒன்றி ருந்தால்
வினை யென்று வீழும்மனம்

மனமென்று ஒன்றி ருந்தால்
மரணம்வரை துயர் நீளும்

மனம் மரிக்க வேண்டி 2

கண்ணாடி உடைகிறது 
சத்தம் எழவில்லை !

காட்சிகள் வந்தபோதும் 
கண்ணுக்கு தெரியவில்லை !

கேள்விகள் தட்டும்போதும்
வாய் மட்டும் திறப்பதில்லை !

நெருப்புகள் சுட்டபிறகும்
உடலுக்கு ஒன்றுமில்லை !

வஞ்சனை வீசுங்காற்று
நெடியேற அறியவில்லை !

அனைத்தும் ஒத்துபோக
மனமுனக்கு என்னவேலை !!

மனம் மரிக்க வேண்டி 3

எந்நிலையில் பற்றில்லை 
அவ்விடத்தில் மனமுமில்லை 

செயல்வழி யோகமென 
கண்ணா நீ பொய்யுரைத்தாய் 

செயல் வலி துன்பமென
கண்ணா நீ அறிந்தில்லையோ??

உபதேசம் அர்ஜுனனுக்கே
கர்ணன் என்செய்வான் ??

வெள்ளை காகிதத்தில்


துன்ப கதையெழுத 
கோல் ஒன்று நானெடுக்க 

வெள்ளை காகிதத்தில் 
மேலே கருங்கோடு 

கிழே கைவைத்தால் 
செந்நிற மேடு